ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவராகப் பணியாற்றி வந்த டத்தோ டாக்டர் சாஹ்ருடின் ஜமால், அந்தப் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் ஜோகூர் மாநில PN தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் பெரிகாத்தான் நேஷனல் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முஹிதின் யாசினிடம் சமர்ப்பித்துள்ளார்.
தனது ராஜினாமா ஒரு சாதாரணமான ஒன்று என்றும், கட்சியின் மேலிடம் புதிய தலைமையை உருவாக்கி ஜோகூர் மாநில அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வழிவிடவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டத்தோ டாக்டர் சாஹ்ருடின் ஜமால், ஜோ கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் ஆவார். மேலும் இவர் பெர்சத்து (Bersatu) கட்சியின் புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
சமீபகாலமாக ஜோகூர் மாநிலத்தில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இவரது திடீர் பதவி விலகல் ஜோகூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோகூர் மாநிலத்தின் புதிய PN தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலும் பெர்சத்து அல்லது பாஸ் (PAS) கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவர் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜோகூர் மாநில பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் மறுசீரமைப்பு மற்றும் அடுத்தகட்ட தேர்தல் வியூகங்களுக்கு இந்த மாற்றம் ஒரு தொடக்கமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.





















