ஈப்போ:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் ஈப்போ டோல் சாவடி அருகே நிகழ்ந்த கார் விபத்தில், ஒரு தம்பதியினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். விபத்துக்குள்ளான கார் 80 விழுக்காடு தீயில் எரிந்து சாம்பலானது.
நேற்று (ஜனவரி 1, 2026) காலை 8.20 மணியளவில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 264.6-ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த 68 வயது மதிக்கத்தக்க தம்பதியினரின் கார், எதிர்பாராதவிதமாக மற்றொரு காருடன் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னரே, அங்கிருந்த சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவக் குழுவினர் தம்பதியினருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.
தகவலறிந்த மேரு ராயா (Meru Raya) தீயணைப்பு நிலையத்திலிருந்து 6 வீரர்கள் அடங்கிய குழுவினர் 8.28 மணிக்குச் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது கார் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்களின் துரிதமான நடவடிக்கையில் சுமார் 5 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலை 9.25 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் ஷாஸ்லின் முஹமட் ஹனாஃபியா கூறுகையில், “அத்தம்பதியினர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது கார் 80% சேதமடைந்துள்ளது. விபத்தில் தொடர்புடைய மற்றொரு கார் ஏற்கனவே இழுவை வண்டி (Tow truck) மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.
புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.





















