காஜாங்கில் சாலையைக் கடந்த மாணவி மீது மோதிய மோட்டார் சைக்கிள் – போலீசார் விசாரணை ஆரம்பம்!

கோலாலம்பூர்:

காஜாங் பிளாசா மருத்துவ மையத்திற்கு (Kajang Plaza Medical Centre) முன்னால் உள்ள ஜாலான் செராஸ் சாலையில், 16 வயது பள்ளி மாணவி ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்து கடந்த திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

தனியார் துறையில் பணிபுரியும் 33 வயது உள்ளூர் நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், திடீரென சாலையைக் கடக்க முயன்ற மாணவி மீது மோதியது. இந்த மோதலில் அந்த மாணவியின் வலது கை மற்றும் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பான ‘டேஷ்கேம்’ (Dashcam) காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், போக்குவரத்து நெரிசலில் மற்ற வாகனங்கள் நின்று கொண்டிருக்கும்போது, கார்களுக்கு இடையேயிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மாணவி மீது மோதுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் இது குறித்துக் கூறுகையில், “”இந்தச் சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் (கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல்) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பயனாளர்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.”

பொது இடங்களில் சாலையைக் கடக்கும்போது பாதசாரிகளும், வாகனங்களை ஓட்டுபவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here