‘வெற்றி மடானி’ திறன் மேம்பாட்டுத் திட்டம்; டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்

13ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK13) குறிப்பிடத்தக்க இலக்குகளுக்கு இணங்கவும், மனிதவள அமைச்சின் (KESUMA) நோக்கங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும், மனிதவள அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று, வெற்றி மடானி (VETRI MADANI) திறன் மேம்பாட்டுத் திட்டம் 2026-இன் தொடக்கத்தை அறிவித்தார். சுங்கை பூலோ, ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. நாடு தழுவிய அளவில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் இவ்வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“வெற்றி மடானி திறன் மேம்பாட்டுத் திட்டமானது, வெற்றிகரமான ஓர் அறுவடை காலத்தின் நிறைவிற்கு இணையானது,” என்று டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். அமைச்சின் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “வெற்றி’ என்பது மலேசிய இந்தியர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், அவர்கள் வாழ்வில் உயர்வதற்கும் சரியான வாய்ப்புகளை வழங்குவதற்கான மனிதவள (KESUMA) உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இந்த ஆக்கப்பூர்வமான திட்டத்தின் மூலம், சமநிலை வளர்ச்சி மற்றும் நிலையான பணியாளர் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் உன்னதமான வாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.

மலேசிய இந்திய சமூகத்திற்கு வருங்காலத்திற்குத் தேவையான நவீனத் திறன்களை வழங்குவதன் மூலம், அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், தேசியப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. இது சமநிலை திறமை மேம்பாட்டிற்கான HRD Corp-இன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. தொழிற்துறைத் தேவைகளுக்கு ஏற்ப, முறையான பயிற்சித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழிகளை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வெற்றி மடானி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (Machine Learning), இணையப் பாதுகாப்பு (Cybersecurity), தரவு அறிவியல் (Data Science), தானியங்கி முறை (Automation), ரோபோட்டிக்ஸ் (Robotics), இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் செமிகண்டக்டர் போன்ற அதிநவீன மற்றும் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக HRD Corp நிறுவனத்திடமிருந்து RM10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 2,000 பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பங்கேற்பாளர்களின் சான்றிதழ்கள்  வழங்குவதன் மூலம் தொழில்முறைத் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம் நாடு முழுவதும் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய, HRD Corp நிறுவனம் மாநில திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ஆளுமையை உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தின் நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக இணையம் (Online) வாயிலாக மேற்கொள்ளப்படும். பயிற்சிகள் நேரடியாகவோ அல்லது கலப்பு (Hybrid) முறையிலோ வழங்கப்படும். “மடானி அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப, இந்திய திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்திற்குத் தயாரான மலேசியாவை உருவாக்கும் நோக்கில் இந்த வெற்றி மடானி திட்டம் செயல்படும், என்று HRD Corp-இன் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சையத் ஆல்வி பின் முகமது சுல்தான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here