கோலாலம்பூர்:
பினாங்கின் சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி கிளெமெண்ட் சிலுவாசேகரம் (Clemont A/L Siluasegram) தப்பியோடியதைத் தொடர்ந்து, செபெராங் பிறை செலாத்தான் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
47 வயதான கிளெமெண்ட், வீடு புகுந்து திருடுதல் (பிரிவு 457) மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு (பிரிவு 379A) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அவருக்கு வலிப்பு (Seizure) ஏற்பட்டதால், சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில்ப்ஜனவரி 23 (வெள்ளிக்கிழமை) மதியம் 3.45 மணியளவில், நீலம் மற்றும் வெள்ளை நிற மருத்துவமனை உடையில் இருந்தபோதே அவர் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பினார் என்று, பினாங்கு மாநிலத் துணை போலீஸ் கமிஷனர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கைதியை உடனடியாகப் பிடிக்க மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ‘ஒப்ஸ் துட்டுப்’ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.





















