கோலாலம்பூர், ஜனவரி 28:
மலேசியாவின் வாராந்திர எரிபொருள் விலை மாற்றத்தின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 சென் உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதுவரை லிட்டருக்கு 2 ரிங்கிட் 88 சென்னுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், தற்போது 2 ரிங்கிட் 92 சென்னாக உயர்ந்துள்ளது.
பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மானியத்திற்குரிய RON 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM 1.99 என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. அதேபோல், RON 97 பெட்ரோல் விலையிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த வாராந்திர விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு மலேசிய மாநிலங்களான சரவாக் மற்றும் சபாவில் டீசல் விலை லிட்டருக்கு RM 2.15 என்ற பழைய விலையிலேயே மாற்றமின்றித் தொடர்கிறது. அங்கு டீசல் மீதான மானியம் இன்னும் முழுமையாக நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருவதால், தகுதியுள்ள வாகன உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மாதந்தோறும் RM 200 ரொக்க மானியத்தை (Budi Madani) தொடர்ந்து பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















