காஜாங்கில் இரு பெண்களை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக ஆடவர் மீது நாளை வழக்கு!

காஜாங், பிப்ரவரி 4:

பண்டார் டெக்னாலஜி காஜாங்கில் உள்ள ஒரு வீட்டில், வளர்ப்பு கோழியை அறுத்துக் கொன்றதுடன், இரு பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் வீட்டு வாசலில், அவரது முன்னாள் காதலர் திடீரென வந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் புரோட்டான் சாகா காரில் இருந்த பொருட்களை எடுத்து குப்பைப்பையில் போட்டு தீயிட்டுள்ளார்.

அந்தப் பெண்ணும் அவரது 80 வயது தாயாரும் வெளியே வந்து பேச முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் அவர்கள் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றிவிட்டு, கையில் லைட்டரை வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார்.

மேலும் ஆத்திரத்தில், அங்கிருந்த வளர்ப்பு கோழிகளில் ஒன்றை எடுத்து அவர்கள் முன்னிலையிலேயே கத்தியால் அறுத்துக் கொன்றுள்ளார்.

பின்னர் அந்த நபர் காரின் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தார். இதில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரின் பின்னால் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தலைமுடி மற்றும் உடல் பாகங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அந்தப் பெண்ணின் மடிக்கணினியைச் (Laptop) சாலையில் வீசி எறிந்துவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார் என்று, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.

இந்தக் கொடூரச் செயல்கள் அனைத்தும் அந்த வீட்டில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியிருந்தது. அன்று மாலையே சௌஜானா புத்ரா பகுதியில் மறைந்திருந்த அந்த நபரைப் போலீசார் கைது செய்தனர்.

அந்த நபர் மீது நாளை காலை 9 மணியளவில் காஜாங் நீதிமன்றத்தில் பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தார்:

கொலை முயற்சிக்காக சட்டப்பிரிவு 307, (குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் )மற்றும் தீயினால் சேதம் விளைவித்தலுக்கான சட்டப்பிரிவு 435 இன் கீழ், (இதற்காக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் ) என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here