கோலாலம்பூர்:
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தின் விவகாரங்களை கவனித்து, அவர்களுக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கும் ரமணன் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு, கருவூல தலைமைச் செயலாளர் டத்தோ ஜொஹான் மமூட் மெரிகன் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், கடந்த திங்கள்கிழமை குறித்த பணி தொடர்பில் அதிகாரப்பூர்வ கடிதத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு முன், பிரதமர் துறையும் கல்வி அமைச்சும் இணைந்து கலந்துரையாடலை இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.



















