மலேசியாவில் AI-க்கு கட்டுப்பாடு : இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா தாக்கல்!

கோலாலம்பூர், பிப்ரவரி 10, 2026:

மலேசியாவின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகச் சட்ட மசோதாவை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலக்கவியல் (Digital) அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நேற்று மக்களவையில் மாமன்னரின் உரை மீதான விவாதத்திற்கு அமைச்சின் சார்பில் பதிலளித்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இந்த மசோதாவின் அவசியம் குறித்துப் பேசினார்: அதில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவெடுத்துள்ள ‘டீப்ஃபேக்’ (Deepfake) மற்றும் தவறான தகவல்களைக் கையாள்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே, ஒரு வலுவான மற்றும் விரிவான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.

AI அமைப்புகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதன் விளைவுகளுக்கு முழுப் பொறுப்பேற்க (Accountability) வேண்டும் என்பதை இந்தச் சட்டம் வலியுறுத்தும்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏதேனும் ஒரு AI கருவியை வெளியிடும் முன், அது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்யும் ‘இடர் மேலாண்மை’ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

AI மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை (AI-generated content) அடையாளப்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல், தகவல்களின் நேர்மையைப் பாதுகாத்தல் (Information Integrity), நாட்டின் டிஜிட்டல் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை மேம்படுத்துதல், டிஜிட்டல் அடையாளத் திருட்டு மற்றும் AI மூலமான மோசடிகளைத் தடுத்தல் ஆகியவற்றை இது உள்ளடக்கும் என்றார்.

இந்தச் சட்ட வரைவுப் பணிகளை தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) மேற்கொண்டு வருகிறது. இது ஜூன் 2026-க்குள் அமைச்சரவையின் ஒப்புதலுக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘சுகாதாரத் துறை’, ‘நிதித் துறை’ போன்ற முக்கியத் துறைகளில் AI பயன்பாட்டை முறைப்படுத்தத் தனித்தனியான வழிகாட்டுதல்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here