பெசுட்:
திரெங்கானு, பெசுட் பகுதியில் உள்ள கம்போங் கெலாம் மாஸ் (Kampung Kelam Mas) குடியிருப்பில், அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் இன்று காலை அவரது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 49 வயதுடைய பேராசிரியை வசிக்கும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து, இன்று காலை 9.38 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டிற்குள் சோதனையிட்டபோது அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டறிந்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் உயிரிழந்து சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து பெசுட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முஹம்மத் ரோசைம் அப் ரஹீம் (Mohd Rozaini @ Ab Rahim) ஊடகங்களிடம் விளக்கமளித்தார்.
“உடற்கூறாய்வு முடிவுகளின்படி, இதயத் தமனிகளில் ஏற்பட்ட அடைப்பு (Coronary Artery Atherosclerosis) காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடலில் எவ்வித காயங்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இதய நோய் பாதிப்பு கொண்டிருந்த அந்த விரிவுரையாளரின் மரணம், காவல்துறையினால் ‘திடீர் மரணம்’ (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது





















