சீனாவுக்கான இந்தியத் தூதராகத் தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி நியமனம்!

இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும், தற்போது பிரிட்டனுக்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றி வருபவருமான விக்ரம் துரைசாமி, சீனாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி ஒரு ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை, 1971-ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படையின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீனாவில் தூதராக இருக்கும் பிரதீப் குமார் ராவத்திற்குப் பதிலாக விக்ரம் இப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.

விக்ரம் துரைசாமியின் நியமனத்தை சீனா உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்:

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் பாலமாகத் தூதர்கள் விளங்குவர். விக்ரம் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சீனா வழங்கும்.”

மேலும், விக்ரம் துரைசாமி தனக்கென ‘வெய் ஜியாமெங்’ (Wei Jiameng) என்ற சீனப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். மாண்டரின் மொழியில் இப்பெயருக்கு ‘சிறந்த கூட்டணியை உருவாக்குபவர்’ அல்லது ‘புகழ்பெற்ற பங்காளி’ என்று பொருள். ஒரு தூதர் அந்நாட்டு மொழியில் பெயர் சூட்டிக்கொள்வது, சுமூகமான அரசதந்திர உறவை முன்னெடுப்பதற்கான ஒரு நற்பண்பாகப் பார்க்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா – சீனா இடையிலான உறவு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இக்கட்டான இந்தச் சூழலில், சீன விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரைத் தூதராக நியமித்திருப்பது சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here