நோன்புப்பெருநாள் விடுமுறை முடிவு: கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்!

கோலாலம்பூர் | மார்ச் 28, 2026

ஐடில்பித்ரி (Aidilfitri) விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதால், இன்று மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் சுமார் 30 லட்சம் (3 million) வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறையை முடித்துக்கொண்டு கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) மற்றும் கோலாலம்பூர் நோக்கிப் பொதுமக்கள் பெருமளவில் திரும்புவதால் வாகன நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று, மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை புதிய பள்ளிக்கூட தவணை தொடங்கவுள்ளதால், விடுதி மாணவர்களைப் பெற்றோர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதும் இந்த நெரிசலுக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

மாலை 5:39 மணி நிலவரப்படி, சுங்கை பெசி (Sungai Besi): சுங்கை பெசி சுங்கச்சாவடியிலிருந்து கோலாலம்பூர் மாநகரம் நோக்கி வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன.

தெற்குப் பகுதி: செனவாங் – போர்ட் டிக்சன் மற்றும் புத்ரா மஹ்கோத்தா – பாங்கி இடையேயான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை: ஆயர் கெரோவிலிருந்து சிம்பாங் எம்பாட் நோக்கியும், அலோர் ஸ்டாரிலிருந்து பெண்டாங் நோக்கியும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சுமுகமான பயணத்தை உறுதி செய்ய அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்: அதில் ஸ்மார்ட் லேன்கள் (Smart Lanes): நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 34 இடங்களில ‘ஸ்மார்ட் லேன்கள்’ செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் ஷவ்வால் மாதம் முழுவதும் போக்குவரத்துச் சீராக இருக்கக் கனரக வாகனங்கள் சில முக்கிய நேரங்களில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இதுவரை போக்குவரத்தைப் பாதிக்கும் வகையிலான பெரிய விபத்துகள் ஏதும் பதிவாகவில்லை. இருப்பினும், மாலை நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் ஓட்டுநர்கள் பொறுமையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here