புக்கிட் காயூ ஹித்தாம் எல்லையில் அதிரடி: 400 லிட்டர் பெட்ரோல் கடத்திய தாய்லாந்து ஆடவர் கைது!

புக்கிட் காயூ ஹித்தாம் | ஏப்ரல் 8, 2026

மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதியான புக்கிட் காயூ ஹித்தாம் குடிவரவு, சுங்கம் மற்றும் தனிமைப்படுத்தல் (ICQS) வளாகத்தில், சட்டவிரோதமாகப் பெட்ரோல் கடத்த முயன்ற 50 வயது மதிக்கத்தக்க தாய்லாந்து ஆடவர் ஒருவரை மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 10:45 மணியளவில், எல்லையைத் தாண்டி வெளியேறும் வரிசையில் (Outbound Lane) இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று புக்கிட் காயூ ஈத்தாம் MCBA தளபதி சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஃபௌசி முகமட் யூசோப் தெரிவித்தார்.

தாய்லாந்து பதிவு எண்கொண்ட கருப்பு நிற ‘டொயோட்டா கேம்ரி’ (Toyota Camry) காரில் வந்த ஒருவரின் நடத்தை அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் அந்தக் காரைத் தீவிரமாகச் சோதனை செய்தபோது, காரின் பின்புறம் மற்றும் இருக்கைப் பகுதிகளில் பெட்ரோலை மறைத்து வைப்பதற்காகப் பிரத்யேகமாக மாற்றங்கள் (Modifications) செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ரகசிய அறைகளில் சுமார் 400 லிட்டர் பெட்ரோல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 1,550 ரிங்கிட் ஆகும்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பெட்ரோல் என மொத்தம் 6,550 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க அந்தத் தாய்லாந்து ஆடவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், மேலதிக விசாரணைக்காகக் குபாங் பாசு (Kubang Pasu) உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் விவகாரம் குறித்துச் சப்ளை கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 (Control of Supplies Act 1961)-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. எல்லையோரங்களில் மானிய விலையிலான எரிபொருள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here