கோலாலம்பூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் ஷாமெலின் (Taman Shamelin) பகுதியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்திய 34 பேர் கொண்ட கும்பலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா RM2,000 முதல் RM3,000 வரை அபராதம் விதித்துள்ளது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் நான்கு மாதச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் 19 வயது இளைஞர்கள் இருவருக்கு தலா RM2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மாஜிஸ்திரேட் ஃபைசாநூர் ஹசன் (Faezahnoor Hassan) முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் செராஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நடந்தது.
ஒரு லோரி கேளிக்கை விடுதியின் முன் வாயிலை மோதித் தகர்த்தது. அதைத் தொடர்ந்து ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது.
அவர்கள் கற்கள், தடிகல் மற்றும் தாக்கும் நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய பிற பொருட்களையும் வைத்திருந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான ஒரு நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கும்பல் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் (ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்) குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் முகமட் அரிஃபின் அப்துல் வஹாப் வாதிடுகையில், “இது அவர்களின் முதல் குற்றம் என்றும், அவர்கள் தங்கள் தவற்றுக்கு மன்னிப்பு கோருவதாகவும்” கூறி குறைந்தபட்ச அபராதத்தைக் கோரினார். நீதிமன்றத்தின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.





















