கோலாலம்பூர்:
மீரி நகரைச் சேர்ந்த 64 வயதுடைய ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவர், டிக்-டாக் செயலி மூலம் பழகிய நபர் ஒருவரிடம் சுமார் 11 லட்சத்து 73 ஆயிரம் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.
வெளிநாட்டவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாட்ஸ்அப் வழியாகத் தனது ஆசை வார்த்தைகளால் அந்தப் பெண்ணைக் கவர்ந்த மோசடிக்காரர், சுரங்கத் திட்டம் ஒன்றிற்கு நிதி உதவி தேவைப்படுவதாகவும் தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரிடமிருந்து பணத்தைக் கறந்துள்ளார்.
இதனை நம்பி 59 தவணைகளில் ஒன்பது வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பிய அந்தப் பெண், பின்னர் தனது குடும்பத்தினரிடம் விவாதித்த பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சமூக ஊடகங்களில் அறிமுகமாகும் நபர்களைத் நம்பிப் பணத்தை இழக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



















