ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மாகாணத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெலாவி (Melawi) பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து, வியாழக்கிழமை (ஏப்ரல் 16) காலை ஏர்பஸ் H130 (Airbus H130) ரக ஹெலிகாப்டர் வானில் பறக்கத் தொடங்கியது. புறப்பட்ட ஐந்தாவது நிமிடத்திலேயே, தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த இந்தோனேசிய மீட்பு வாரியத் தலைவர் முஹம்மது சையாஃபி (Muhammad Syaugi) தலைமையிலான மீட்புக் குழுவினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தொடர்பு துண்டிக்கப்பட்ட இடம், அடர்ந்த காடுகளையும் மிகவும் செங்குத்தான மலைப்பாங்கான நிலப்பரப்பையும் கொண்ட பகுதி என்பதால், மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் இருந்தன.
கடைசித் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் மேற்கே, ஹெலிகாப்டரின் வால் பகுதி (Tail section) போன்ற சிதைவுகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை மாற்றம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதியான சூழலில் நடந்த இந்த விபத்து, இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















