இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் பலி

பெய்ரூட் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இந்த போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். இதனால், உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த முடிவு செய்து, இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது.

அதில் பலன் ஏற்பட்டது. லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும், பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய அளவில் தீர்வு ஏற்படுவதற்கான நடவடிக்கையாக, தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினர்.

இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் உறுதிப்படுத்தினார். இதன்படி, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி வரை போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட நிலையில், அது பின்னர் மே மாதம் தொடக்க வாரம் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனினும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்படி, இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனான் நாட்டில் 10 பேர் பலியானார்கள். கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் பலியாகி உள்ளனர். இதனால், கடந்த மார்ச் 2-ந்தேதியில் இருந்து இதுவரை 2,659 பேர் உயிரிழந்தும், 8,183 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

ஹிஸ்புல்லா குழுக்களின் தளங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்து வருகிறது என இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், பலியானவர்களில் பலர் பொதுமக்கள் ஆவர் என தகவல் தெரிவிக்கின்றது. லெபனானை இஸ்ரேல் தாக்க தொடங்கியதில் இருந்து இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு தேடி, லெபனானில் இருந்து இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here