கோலாலம்பூர்:
சுபாங் ஜெயா, பூச்சோங் பிரிமாவில் உள்ள அடகுக்கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த துணிகர கொள்ளை முயற்சியில் தொடர்புடைய மூன்று நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முகமூடி அணிந்து அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்த அந்த மர்ம நபர்கள், ஊழியர்கள் இருந்த கவுண்ட்டர் பகுதிக்குள் நுழைய முயன்று தோல்வியடைந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
கடையின் மேலாளர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்ததைத் தொடர்ந்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான காணொளி பரவி வரும் வேளையில், குற்றவியல் சட்டம் பிரிவு 393இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் 03-78627222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு போலீசாருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















