சுந்தர காண்டத்தின் மகிமை

ராமாயணத்தில் இடம்பெற்ற ஏழு காண்டங்களில் ஒன்று தான் சுந்தர காண்டம். ஆனால், இந்த பகுதி மற்ற காண்டங்களிலிருந்து வித்தியாசமானது — ஏனெனில் இது முழுவதும் அனுமனின் வீரத்தையும், பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு பக்தனின் மனமும் இந்த சுந்தர காண்டத்துடன் இணைந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

வால்மீகி எழுதிய சுலோகங்களை சமஸ்கிருதத்தில் படிப்பதே வழக்கம். ஆனால் சமஸ்கிருதம் அறியாதோர் தமிழ் எழுத்தில் அவற்றை வாசித்தாலும் அதே பலன் கிடைக்கும் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.

அனுமன் சீதையை தேடி இலங்கைக்கு செல்கிறார். பல தடைகள், சோதனைகள், சுரசை, சிம்ஹிகை போன்றவற்றை எதிர்கொண்டு, இறுதியில் சீதையைக் காண்கிறார். அவளிடம் ராமனின் செய்தியை தெரிவித்து, தைரியம் அளிக்கிறார். பின்னர் ராவணனிடம் ராமரின் தூதராக சென்று பேசுகிறார். அவரது வாலில் தீ வைத்தபின், இலங்கையை தீயால் சூழ்ந்துவிட்டு, திரும்பி ராமனிடம் சீதையைக் கண்டதாகச் சொல்லுகிறார். இதுவே சுந்தர காண்டத்தின் மையப் பகுதி.

ஏன் “சுந்தர காண்டம்” ?

ராமாயணத்தில் எந்த காண்டத்திற்கும் கதாநாயகனின் பெயர் இல்லை. ஆனால் வால்மீகி அனுமனின் பெருமைமிகு செயல்களை நினைத்து, அவரின் பெயரில் ஒரு பகுதி இருக்கவேண்டும் என விரும்பினார். அதற்கு அனுமன் தாழ்மையுடன் மறுத்ததால், வால்மீகி அவரது அன்னை அஞ்சனை அழைத்த பெயரான “சுந்தரா” என்ற பெயரிலிருந்து “சுந்தர காண்டம்” என வைத்தார்.

“சுந்தரம்” என்றால் அழகு என்பதோடு, அது “அரசனின் தூது” என்பதையும் குறிக்கும். அனுமன் ராமனின் தூதராகச் செயல்பட்டதாலே அந்தப் பெயர் சிறந்தது.

நன்றிக்கடன்

வனவாசம் முடிந்த பிறகு, வால்மீகி இமயமலையில் நடந்தபோது பாறைகளில் அழகாக எழுதப்பட்ட ராமாயணத்தின் சில பகுதிகளை கண்டார். அவை தமது எழுத்துகளை விட நயமானதாக இருந்ததால் ஆச்சரியப்பட்டார். அதை எழுதியவர் அனுமன் என அறிந்தார்.

அனுமன், “இது எனது ராமாயணம். ராமரை சந்தித்தது முதல் பட்டாபிஷேகம் வரை நான் அனுபவித்த நிகழ்ச்சிகள் இதிலுள்ளது” என்றார்.

அதனை வாசித்த வால்மீகி, “உன் எழுத்து என் காவியத்தை மிஞ்சிவிடும்” எனக் கூறியபோது, அனுமன் உடனே தன் எழுதியதை வாலால் அழித்துவிட்டார். இதைக் கண்ட வால்மீகி மிகுந்த உணர்ச்சியடைந்தார்.

அனுமனின் அந்த தியாகத்திற்கும், தன்னுடைய நன்றிக்கடனுக்கும் நினைவாக வால்மீகி, அந்தப் பகுதியை சுந்தர காண்டம் எனப் பெயரிட்டார்.

சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் ஒருவர்:

  • துன்பங்களில் இருந்து விடுபடுவர்
  • மன உறுதி, நம்பிக்கை, அமைதி கிடைக்கும்
  • ஆரோக்கியம், துணிச்சல், வெற்றி, திருமண வாழ்வு ஆகியவை சிறக்கும்

ஸ்ரீ ராமர் கூறியபடி, “சுந்தர காண்டம் பாராயணம் செய்பவரை தீமை அண்டாது, நன்மை நிலைத்திருக்கும்” என அருளப்பெற்றது.

ஒரு சுலோகத்தில் சுந்தர காண்டம்

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம தயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் |
அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்ய தசகம் தக்த்வா புரீம் தாம் புந:
தீர்ணாப்தி: கபிபிர்யுதோ யம் அனமத் தம் ராமச்சந்த்ரம் பஜே ||

அர்த்தம்:

ராமனின் அனுக்ரஹத்தால், அனுமன் கடலை கடந்து இலங்கைக்கு சென்று சீதையை கண்டார். ராவணனின் படைகளை அழித்தார். இலங்கையை தீயால் எரித்தார். பின்னர் திரும்பி ராமனை வணங்கி செய்தியை தெரிவித்தார். அந்த அனுமனுக்கு அருளிய ராமனை நாமும் வணங்குவோம்.

அனுமனின் பக்தி, பணிவு, தியாகம் ஆகியவற்றை நம் வாழ்க்கையிலும் பின்பற்றினால் எந்த சிரமமும் நிலைக்காது.

வாழ்க்கையில் பிரச்சனைகள், மனச்சோர்வு, துக்கம் போன்றவை வந்தால், சுந்தர காண்ட பாராயணம் செய்வதால் அவை விலகும் என நம்பப்படுகிறது. இதனை மனம் ஒன்றியபடி படிப்பது பாராயணம் எனப்படுகிறது. சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பது ராமாயணத்தை முழுமையாக படிப்பதற்குச் சமம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here