மலேசியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை: ரேஷன் முறைக்கோ, வாகனக் கட்டுப்பாட்டிற்கோ அவசியமில்லை என அன்வார் உறுதி!

சிரம்பான்:

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் எரிபொருள் விநியோகம் சீராகவும் போதுமானதாகவும் உள்ளது என்றும், நாட்டில் எரிபொருளை ரேஷன் முறையிலோ அல்லது வாகனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலோ விநியோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.

செந்தாயானில் இன்று நடைபெற்ற ‘தேசிய இளைஞர் தின 2026’ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அண்டை நாடு ஒன்றில் சுமார் 400 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அவர்களுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் விநியோக நிலைமை மிகவும் சீராகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிலிப்பைன்ஸின் செபு (Cebu) நகரில் அண்மையில் நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் மாநாட்டில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பதற்றம் மற்றும் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பாதிப்புகள் காரணமாக, உலகளவில் டீசல் மற்றும் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.

இத்தகைய இக்கட்டான சூழலிலும், மலேசியாவில் எரிபொருள் தட்டுப்பாடோ, பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளோ இல்லை. இதற்கு பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்தின் சிறந்த நிர்வாகமும், அரசாங்கத்தின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளுமே காரணம் என்று அவர் பாராட்டினார்.

நாட்டின் ஆற்றல் வளத்தை மேலும் வலுப்படுத்த ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் பெட்ரோனாஸ் நிறுவனம் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் மலேசியாவிற்கு அளிக்கும் முன்னுரிமையும் மரியாதையும் பெருமைக்குரியது என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் இந்த ஸ்திரத்தன்மையை உணர்ந்து இளைஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி மற்றும் நிதியுதவி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here