கிள்ளான்,
இறைப்பணியோடு மக்கள் பணியையும் இரு கண்களாகக் கொண்டு இயங்கி வரும் இராஜயோகசக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (RPT), தனது மகுட நிகழ்வான ‘மகா அன்னதானம் 2026’-ஐ கடந்த மே 9-ஆம் தேதி கிள்ளான், பண்டமாரான் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது. இந்த நிகழ்விற்கு அலை அலையாக வந்து நிறைந்து, பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைத்ததுடன், RPT மீது அவர்கள் கொண்டுள்ள தூய பக்தியையும் வெளிக்காட்டியது.

சுமார் 20 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்த உன்னத நிகழ்வு, RPT இயக்கத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைவருமான மதிப்பிற்குரிய டத்தோ ஸ்ரீ குருஜி (DATO’ SRI DR. V. BALAKRISHNAN) அவர்களின் தெய்வீகப் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது துணைவியார் மதிப்பிற்குரிய டத்தின் ஸ்ரீ சுந்தரி பாலகிருஷ்ணன் (குருமாதா) அவர்களின் வழிகாட்டலில் ஆண்டுதோறும் சீரோடும் சிறப்போடும் நடத்தப்பட்டு வருகிறது.

இயக்கத்தின் உன்னதக் கொள்கை:
RPT இயக்கம் வழிபாடு, தியானம் மற்றும் ஆன்மீகத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அன்னதானம், சமூக சேவை மற்றும் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தைப் பாதுகாப்பதையும் தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, ‘பிறரை மகிழ்ச்சி அடையச் செய்தலே’ இவ்வியக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சக மனிதர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் பக்குவத்தை மக்களிடையே வளர்ப்பதன் மூலம் மட்டுமே ஒரு வலிமையான மற்றும் நல்ல சமூகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என RPT இயக்கம் ஆழமாக நம்புகிறது. அவ்வகையில், டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களின் தெய்வீகப் பிறந்தநாளாகிய பிப்ரவரி 22, 2026 அன்று, உலகம் முழுவதும் உள்ள RPT கிளைகளின் ஏற்பாட்டில் பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவும் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.
உலகளாவிய ஒருமைப்பாடு:
இவ்வருட அன்னதான நிகழ்வு, எங்கும் பக்தி மணம் பரவ, கலைகள் களைகட்ட ஒரு மிகப்பெரும் உலகளாவிய ஆன்மீக மாநாடு போலக் காட்சியளித்தது. மலேசியா மட்டுமன்றி சிங்கப்பூர், இந்தியா, லண்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா என உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் RPT உறுப்பினர்களும் பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர். சுமார் 15,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
மகேஸ்வர பூஜை மற்றும் நிதியுதவி:
டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களின் புதல்வி டாக்டர் சீதா பாலகிருஷ்ணன் (DR. SEETAH BALAKRISHNAN) தலைமையில் நடைபெற்ற இந்த மகா அன்னதான நிகழ்வில், அவரது முன்னிலையிலேயே மிகவும் புனிதமான ‘மகேஸ்வர பூஜை’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டத்தோ ஸ்ரீ குருஜி அவர்கள் தமது புதல்வி டாக்டர் சீதா பாலகிருஷ்ணன் மருமகன் டாக்டர் மகேஷ் ஆனந்த் அவர்களுடன் வருகை தந்து சிறப்பித்தார். அவரை நேரில் பார்த்த அனைவரும் பெரும் குதூகலம் அடைந்தனர். குருஜியின் தெய்வீக உரையைப் பக்தர்கள் பேரார்வத்தோடு கேட்டு மகிழ்ந்தனர். மேலும், சமூக அக்கறையுடன் பண்டாமாரான் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத் திருப்பணிக்காக RM 10,000 நன்கொடையை டத்தோ ஸ்ரீ குருஜி அவர்கள் ஆலய நிர்வாகத்திடம் வழங்கினார்.
கலைகளின் சங்கமம்:

மகா அன்னதானத்துடன் தமிழரின் பாரம்பரியக் கலைகளைப் பறைசாற்றும் கலாச்சார விழாவாகவும் இந்நாளின் நிகழ்வு அமைந்தது. பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் மற்றும் உறுமி மேளம் எனத் தமிழரின் கலைநயமும் அழகும் அங்கு அரங்கேறின. பல்லின மக்கள் வாழும் மலேசியாவின் அடையாளமாகச் சிங்க நடனம் (Lion Dance) அனைவரையும் கவர்ந்தது.
மக்கள் சேவையே மகேசன் சேவை!
இந்த நிகழ்வின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் சுமார் 600 RPT தொண்டூழியர்கள். குறிப்பாக, இளைஞர்கள் பாதுகாப்பு மற்றும் உணவுப் பரிமாறலில் காட்டிய ஒழுக்கம் பாராட்டுக்குரியது. 20-க்கும் மேற்பட்ட RPT மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய முதலுதவிப் பிரிவு தயார் நிலையில் இருந்தது கூட்டத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் பலமாக அமைந்தது. இந்த நேர்த்தியான ஏற்பாடுகள் குறித்து விழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் Dr. கோமதி கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாகத் தங்களது குழுவினர் டாக்டர் சீதா அவர்களின் வழிகாட்டலில் சிறப்பான முறையில் திட்டமிட்டு செயல்பட்டதாக தெரிவித்தார்.
மக்கள் ஓசையின் பெருமிதம்:
சமயம், பண்பாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களின் இந்த உன்னதப் பணியைச் செய்தியாக வெளியிடுவதில் மக்கள் ஓசை நாளிதழ் பெரும் பெருமிதம் கொள்கிறது. கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், சமூகக் கடப்பாடு, ஆன்மீகம் மற்றும் குருபக்தி என எந்த அறத்தையும் விட்டுவைக்காத இந்த மாபெரும் இயக்கம் மேலும் வலிமை பெற வாழ்த்துகிறோம்.
உண்மையில், RPT-யின் இந்த மகா அன்னதானம், அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் மனதிலும் தெய்வீகத் திருப்தியையும், மனிதாபிமானத்தின் மேன்மையையும் ஆழமாக விதைத்துள்ளது என்பதை கலந்துகொண்டவர்களை பார்த்தபோது உணர்ந்து கொண்டோம்.





















