மஞ்சோங் மருத்துவமனையில் தனது மேற்பார்வையாளரால் தாக்கப்பட்டதாகக் கூறிய துப்புரவுப் பணியாளர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் தகராறைக் கையாள்வதில், அவர் முதலாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக மலேசிய சோசலிசக் கட்சி (PSM) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் நிராகரித்துள்ளார். முன்னதாக, சிவநேசன் முதலாளிகளுக்குச் சாதகமானவர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானவர் என்று PSM துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் குற்றம் சாட்டியிருந்தார். சிவனேசனின் கருத்துக்கள் ஒருதலைப்பட்சமானவை என்றும், அவர் இந்தத் தகராறில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தைச் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த, மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான சிவநேசன், தொழிற்சங்கங்களில் தனது நீண்டகால ஈடுபாடு இந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதைக் காட்டுவதாகக் கூறினார். பல பொது மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களில் செயலாளராகப் பணியாற்றியதாகவும், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவராகவும், கியூபேக்ஸ் (Cuepacs) கவுன்சில் உறுப்பினராகவும் இருந்ததாகவும், வழக்கறிஞரான பிறகும் கூட தொழிலாளர் உறவுகள் தொடர்பான வழக்குகளில் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நான் என் வாழ்வில் எந்தவொரு முதலாளிக்காகவும் வாதாடியதில்லை என்பது தொழிற்சங்கங்களுக்கும் ஊழியர்களுக்கும் தெரியும். எனவே, என்னை முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்று அழைப்பது உண்மையில் அவதூறானது,” என்று அவர் கூறினார். இருப்பினும், மாநில அரசில் சேர்ந்ததிலிருந்து, தொழிலாளர் விவகாரங்களில் தான் நடுநிலையாக இருக்க வேண்டியிருந்தது என்று சிவநேசன் கூறினார்.









