சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியம் RM1.5 பில்லியனாக அதிரடி உயர்வு!-பிரதமர் அன்வார் அறிவிப்பு

பெனாம்பாங்:

மலேசியக் கூட்டரசு அரசாங்கம் சபா மாநிலத்திற்கு வழங்கி வரும் இடைக்கால சிறப்பு மானியத் தொகையை (Interim Special Grant) நடப்பு ஆண்டில் 1.5 பில்லியன் ரிங்கிட்டாக (RM 1.5 Billion) அதிரடியாக உயர்த்தியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த மானியத் தொகை RM 600 மில்லியனாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று பெனாம்பாங்கில் உள்ள கடாசந்தூசுன் கலாச்சார சங்க (KDCA) வளாகத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான சபா மாநில அளவிலான ‘காமதான் அறுவடைத் திருவிழாவை’ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசிய போது பிரதமர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

மலேசிய உடன்படிக்கை 1963-இன் (MA63) கீழ், சபா மாநிலத்திலிருந்து கூட்டரசு அரசாங்கத்திற்குச் செல்லும் வருவாயில் 40 விழுக்காட்டை மீண்டும் சபா மாநிலத்திற்கே உரிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

இந்த 40% வருவாய் உரிமைக்கான இறுதிச் சூத்திரம் (Final Mechanism) மற்றும் முறையான கணக்கீடுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனவே, கூட்டரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை, சபாவின் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையின்றி நிதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தற்காலிக மானிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நிதியியல் ஏற்பாட்டின் 112D பிரிவின் கீழ் வரும் இந்த 40% வருவாய் உரிமை விவகாரம் குறித்துப் பிரதமர் பேசுகையில்:

“என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. சபா மக்களுக்குக் கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் எடுத்துள்ள முடிவை யாரும் சந்தேகிக்கவோ அல்லது சர்ச்சை ஆக்கவோ வேண்டாம்.”

மேலும், இந்த புதிய நிதி ஒதுக்கீட்டுத் திட்டம் வரும் ஜூன் மாதம் அல்லது டிசம்பர் மாதத்தில் எப்போது முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்பதை இருதரப்பு அதிகாரப்பூர்வக் குழுக்களும் கூடி விவாதித்து, பின்னர் கூட்டரசு மற்றும் சபா மாநில அரசுகளின் உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதி செய்யப்படும் என்றும் பிரதமர் அன்வார் உறுதியளித்தார்.

சபா மாநிலத்தின் நீண்டகாலப் பொருளாதார மற்றும் உரிமை சார்ந்த கோரிக்கைகளுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புத்ராஜெயா நிர்வாகம் வழங்கியுள்ள இந்த மாபெரும் நிதி அங்கீகாரம், சபா மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here