கோலாலம்பூர்:
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான ‘Grindr’ சமூக ஊடக செயலியில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் ஆண்களை ஏமாற்றி வரவழைத்து, மிரட்டிப் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 முதல் 28 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர்கள், தங்களைக் காதலிப்பவர்கள் போலக் காட்டிக்கொண்டு, பாதிக்கப்பட்ட ஆண்களைச் சந்திப்பதற்கு வரவழைத்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அப் ரஹ்மான் அர்ஷாத் தெரிவித்தார்.
இக்கும்பல் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ஜோகூர் பாருவில் மட்டும் குறைந்தது 9 கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக நம்பப்படுகிறது.
“பாதிக்கப்பட்டவர்கள் முதலில் டேட்டிங்கிற்காகச் சந்தேக நபர்களைச் சந்திக்கச் சம்மதித்து அவர்களின் வாகனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது, அக்கும்பலின் மற்ற உறுப்பினர்கள் திடீரென அங்கு தோன்றி, தங்களைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் (Security Personnel) என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பொது இடத்தில் தவறான செயலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டி, அவர்களை மிரட்டி, தாக்கி, அவர்களிடம் இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பறித்துள்ளனர்,” என்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அவர்களின் வங்கி அட்டை எண்களைப் (PIN Numbers) பெற்று, அதன் மூலம் பணத்தை மீட்டதோடு, தங்க நகைகளையும் வாங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாமான் பெலாங்கி (Taman Pelangi) மற்றும் கம்பாங் மலாயு மஜிடி (Kampung Melayu Majidee) ஆகிய பகுதிகளில் 25 முதல் 40 வயதுடைய 9 ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த இக்கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த இழப்பு மதிப்பு RM315,220 ஆகும்.
இதைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகள் தீவிரப் புலனாய்வில் இறங்கி, கடந்த மே 30-ஆம் தேதி காலை 11:30 மணியளவில் பகாங், கேமரன் ஹைலண்ட்ஸில் வைத்து 5 சந்தேக நபர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கைபேசிகள், ஒரு கார், டெபிட் கார்டுகள், நகைகள் மற்றும் தங்கம் வாங்கியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் ஏற்கனவே கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகள் உள்ளன.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கை ஜொகூர் அரசு வக்கீல் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் மூன்று பேர் நாளை ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவத்திற்குத் துணை நின்ற மற்றொரு உள்ளூர் நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




















