அடுக்குமாடி குடியிருப்பின் 24-வது மாடியிலிருந்து விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப மரணம்!

கோலாலம்பூர்:

பினாங்கு, தெலுக் கும்பார் (Teluk Kumbar) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 24-வது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 5 வயது சிறுவன் ஒருவன் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் அச்சிறுவன் விழுந்து கிடப்பதை பொதுமக்கள் கண்டறிந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அனுவால் அப் வஹாப் தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறை இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று கூறினார்.

இதற்கிடையில், இந்த சோக செய்தி கேட்டு நள்ளிரவு 12.15 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்ருல் மஹாதிர் அஜீஸ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

“பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனவலிமையும், பொறுமையும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்” என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here