கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையினால் (Nada / AADK) நடத்தப்பட்ட மூன்று நாள் அதிரடி சோதனையில், SPM தேர்வு எழுதவிருக்கும் 17 வயது மாணவர் உட்பட மொத்தம் 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரம்பான், ஜெம்போல், தம்பின் மற்றும் போர்ட் டிக்சன் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த ‘ஓப்ஸ் பெர்டானா’ (Ops Perdana) நடவடிக்கை குறித்து விளக்கிய முகமையின் துணை இயக்குநர் டத்தோ ஜைனுடின் அப்துல்லா, பிடிபட்டவர்களில் அந்த 17 வயது மாணவர் இரவு நேரத்தில் விழித்திருந்து படிப்பதற்காகக் கெத்தூம் (Ketum) திரவத்தைப் பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சோதனையின் போது, மின்சார வசதி இல்லாத ஒரு வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திய கணவன், மனைவி கைது செய்யப்பட்ட வேளையில், அங்கிருந்த அவர்களின் 10 மற்றும் 4 வயதுடைய இரு பிள்ளைகள் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், ஜெம்போல் பகுதியில் 15 மாதக் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் ஷாபு போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டதோடு, மியன்மார், இந்தோனேசியா மற்றும் ரோஹிங்கியா நாட்டைச் சேர்ந்த ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும் 1952 ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




















