கோலாலம்பூர்:
கடந்த 2018-ஆம் ஆண்டு தனது காதலியின் 13 வயது மகளைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக, தளவாடக் கடை (Logistics store) ஊழியர் ஒருவருக்குக் கூச்சிங் மேல்முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட யாப் கக் மின் (Yap Kak Min) என்பவருக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த மரண தண்டனையைத் தளர்த்தி, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக மாற்றியமைத்து நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமை தாங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பினை வழங்கியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, மீரி, பண்டார் பாரு துடானில் (Bandar Baru Tudan, Miri) உள்ள ஒரு வீட்டில் இக்கொலைச் சம்பவம் நடைபெற்றது.
இக்கொலை வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் யாப்பிற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
மரண தண்டனையைத் தளர்த்தியதற்கான காரணத்தைக் குறிப்பிட்ட நீதிபதி அஸ்மான் அப்துல்லா, “மரண தண்டனை என்பது மிகவும் அரிதான அல்லது பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கும் மிகக் கொடூரமான குற்றங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு அந்த வகையைச் சேர்ந்ததல்ல,” என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு 12 பிரம்படிகளும் தண்டனையாக உறுதி செய்யப்பட்டன.





















