செரியானில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பரிதாபமாகப் உயிரிழந்தார்; தாயாருக்குப் பலத்த தீக்காயம்.

கோலாலம்பூர்:

சரவாக், செரியானில் உள்ள கம்போங் துபிஹ் பத்து ராவ்ங் (Kampung Tubih Batu Raung) பகுதியில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கரத் தீ விபத்தில் 37 வயது பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

அவரது 65 வயது தாயார் முகத்திலும் உடலிலும் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்.

நூருல் ஃபர்ஹானா அமேருடின் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வீட்டின் குளியலறையில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகச் சரவாக் தீயணைப்பு மீட்பு இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 12.29 மணியளவில் அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, செரியான் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 48-க்கு 70 அடி பரப்பளவைக் கொண்ட அந்த ஒற்றை மாடி வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.

முகத்திலும் கைகளிலும் பலத்த தீக்காயமடைந்த அவரது தாயார் ஷரீஃபா போக் வான் முஹ்சின், தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே செரியான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்துப் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here