போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை, அமைச்சர் உதயநிதியின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் கொடுத்துள்ளதாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்துக்கிடமாக உள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது போதைப் பொருள் தடுப்பு தொடர்பான புகார் மனுவை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும். இளைஞர்கள், மாணவர்கள் போதை பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். இது நீடித்தால் வரும் 7 ஆண்டுகளில் தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிடும்” என்றார்.
மேலும், ”போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை அமைச்சர் உதயநிதியின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் தந்துள்ளார். போதைப்பொருள் கடத்திய பணத்தில் தான், திமுக தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வருகின்றன. போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்துக்கிடமாக உள்ளது. மோசமான நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்கு திமுக தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்களை எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் தமிழ்நாடு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள போதைப் பொருட்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த நடவடிக்கைகள் கண்துடைப்பாக அமைந்திருப்பதாகவும், தமிழ்நாடு காவல்துறை ஏன் இவ்வளவு நாட்களும் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.





















