(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸியின் தலைமையிலான மாநில அரசு, ருமா காசே ஜோகூர் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 3 முதல் டிசம்பர் 31 வரை மீண்டும் திறக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விண்ணப்பத்தின் மூலம் ஜோகூர் வாசிகளுக்கு மூன்று வகையான வீட்டு வசதி உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் வீட்டில் குடியேறுவதற்கான உதவியாக ரிம2,000, முதல் வீடு வாங்குவதற்கான உதவியாக ரிம5,000, வீட்டு வாடகை உதவியாக ரிம2,500 வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்ப நடைமுறைகள் சுமுகமாக நடைபெறுவதுடன், தேவையற்ற நெரிசல் மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பையும் தவிர்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அலுவலக நேரத்தில் ஜோகூர் மாநில வீடமைப்பு மேம்பாட்டுக் கழகம், முதல் தளம், டத்தோ அப்துல் ரஹ்மான் அந்தாக் கட்டிடம், கோத்தா இஸ்காண்டார், 79503 இஸ்காண்டார் புத்ரி, ஜோகூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம்.
மக்களுக்கான வீடமைப்பு நலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதோடு, உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு அனைத்து உதவிகளும் சென்றடைவதை மாநில அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..






















