அசாமில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

கவுகாத்தி அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வடைந்து உள்ளது.

அசாமில் பருவமழையை முன்னிட்டு அது தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 600-க்கும் மேற்பட்ட கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதன்பின்னர் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால், பாதிப்புகளும் குறைந்து வருகின்றன. எனினும், வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வடைந்து உள்ளது.

5 மாவட்டங்கள்

சிவசாகர், கோலாகாட், ஜோர்ஹட், நகாவன், சராய்தியோ ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். 1.92 லட்சம் பேர் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையை ரூ.9 லட்சம் என்ற அளவில் உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

முதல்-மந்திரி

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, வருகிற புதன்கிழமை (5-ந்தேதி) தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டம் ஒன்றை நடத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதில், சேதமடைந்த வாகனங்கள், கால்நடைகள் மற்றும் பிற சொத்துகள் தொடர்பாக காப்பீடு செய்யப்பட்டதற்கு உரிய இழப்பீடுகளை விரைந்து வழங்க வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

பிரதம மந்திரி சூரிய கர் திட்டத்தின் கீழ் 9,289 பயனாளிகளுக்கு ரூ.41.67 கோடி தொகையை மாநில அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார். 7-ந்தேதி முதல் வெள்ள சேதம் தொடர்பான ஆய்வு பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here