பெந்தோங்கில் காரின் மீது மரம் விழுந்த விபத்து: 4 குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த 5 வயதுச் சிறுவன் நலமுடன் தேறி வருகிறான்!

குவாந்தான்:

பெந்தோங் அருகே காரின் மீது மரம் முறிந்து விழுந்த கோர விபத்தில், தனது பெற்றோர் உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்து உயிர் தப்பிய 5 வயதுச் சிறுவன் முகமட் ரிஸ் ஹாஸிக் தற்போது தெமர்லோ, சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனையில் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

முகம் மற்றும் தலைப் பகுதியில் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ள அச்சிறுவனின் உடல்நிலைத் தேறி வருவதாகப் பஹாங் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் சைஃபுல் அஸ்லான் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

ஜான்டா பைக் அருகேயுள்ள பழைய கோலாலம்பூர் -பெந்தோங் சாலையில் ‘ஃபோர்ட் ரேஞ்சர் ராப்டர்’ வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணித்துக் கொண்டிருந்தபோது இக்கோர விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்தில் மாரான் தொகுதி அம்னோ இளைஞரணித் தலைவர் முகமட் ராட்ஸி ரஹிமி அவரது மனைவி நூரைனி முகமட் ஜாஃப்ரி (வயது 36) சிறுவனின் இரட்டைச் சகோதரனான முகமட் ரிஸ் ஹாஸிம் (வயது 5) சிறுவனின் தாய்மாமன் முகமட் நிஜாம் முகமட் ஜாஃப்ரி (வயது 35) ஆகிய நான்கு பேரின் சடலங்களும் நேற்று தெமர்லோவிலுள்ள ‘கம்போங் பாயா லூவாஸ்’ மசூதியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுத் தயாராக்கப்பட்டன.

பகாங் முதலமைச்சர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அங்கு வருகை தந்து, தாய்-தந்தையை இழந்து தவித்த சிறுவன் ரிஸ் ஹாஸிக்கைக் கையில் ஏந்தியபடி ஆறுதல் கூறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர், நான்கு பேரின் உடல்களும் மாரான், ஸ்ரீ செடுங் முஸ்லிம் மயானத்தில் ஒரே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

தாய்-தந்தையை இழந்துள்ள சிறுவன் ரிஸ் ஹாஸிக்கை இனி யார் பராமரிப்பது என்பது குறித்து அவனது தாயாரின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் எனச் சிறுவனின் தாத்தா ரஹிமி அப்துல் சமத் (வயது 63) தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here