கோலாலம்பூர்:
ஈப்போ, சுங்கை பாரி பிளாட் குடியிருப்பில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்த சோகச் சம்பவம் தொடர்பாக, இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் அள்வி சைனல் அபிடின் தெரிவித்துள்ளார்.
மாணவிகளின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவர்கள் பயின்ற பள்ளியின் ஆசிரியர்களிடம் காவல் துறை அதிகாரப்பூர்வ விசாரணையை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான குற்றப் பின்னணி எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறிய அந்த 14 வயது மாணவிகள் இருவரின் திடீர் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியத் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட டத்தோ முகமட் அள்வி, அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
























