கோலாலம்பூர்:
ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய மன்றக் கட்டடத்திற்கு (MAIS) அருகில் அமைந்துள்ள குன்றுக் காட்டுப் பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 2.83 ஹெக்டேர் (7 ஏக்கர்) பரப்பளவிலான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
இன்று பிற்பகல் 1.01 மணியளவில் இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வரப்பெற்றதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவிப் பணிப்பாளர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த உடனேயே ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 10 வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தத் தீ விபத்தில் கட்டட அமைப்புகளுக்கோ அல்லது மனித உயிர்களுக்கோ எந்தவிதச் சேதமும் பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீ மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்காகத் தீயணைப்பு வீரர்கள் ‘ஃபயர் பீட்டர்’ கருவிகள் மற்றும் தண்ணீர் பம்புகளைப் பயன்படுத்தித் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
























