செப்டம்பரில் விடுதலையாகவிருந்த நிலையில் மீண்டும் கம்பிகளுக்குப் பின்னால்: வீடுபுகுந்து அத்துமீறிய 2 கைதிகளுக்கு 8 மாத சிறை!

கோலாலம்பூர்:

செப்டம்பரில் விடுதலையாகவிருந்த நிலையில், வீடு புகுந்து அத்துமீறிய குற்றத்திற்காக இரு கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 8 மாதச் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களான ஜைனுடின் சிக் அனி (வயது 46), அஜிசான் ஒஸ்மான் (வயது 46) மற்றும் அவர்களின் கூட்டாளியான முகமட் அஷ்ராஃப் ஜுஹைரி (வயது 33) ஆகிய மூவரும் பட்டர்வொர்த் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐனி அடிலா முகமட் பைசால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 12 அன்று காலை 7.50 மணியளவில், தாசேக் கெலுக்கோர், லஹார் யோய் பகுதியிலுள்ள 28 வயதுப் பெண்ணின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்ததாக இவர்கள் மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜைனுடின் மற்றும் அஜிசான் ஆகிய இருவரும் வரும் செப்டம்பர் 11 அன்றுதான் தங்களின் முந்தைய தண்டனையிலிருந்து முழுமையாக விடுதலையாகவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குற்றச் செயல் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்) மற்றும் பிரிவு 34 (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக RM5,000 அபராதமோ அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்பட இடமுண்டு.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 8 மாதச் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here