கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஓயுஜி சமூகக் கூடத்திற்கு அருகில் உள்ள காலி மைதானத்தில் அனுமதியின்றி வாகன நிறுத்துமிடத்தை நடத்தி, செபூத்தே குடியிருப்பாளர் பிரதிநிதி மன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவருக்கு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகச் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் தெரிவித்துள்ளார்.
ஜாலான் அவான் பெசார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, முந்தைய குற்றப் பின்னணி கொண்ட, இதில் சம்பந்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு நிலங்களில் அனுமதியின்றிப் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இதுபோன்ற சட்டவிரோதச் சிண்டிகேட்களை முற்றிலுமாக ஒழிக்கக் கோலாலம்பூர் மேயரும், மாநகரக் காவல் துறைத் தலைவரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
























