நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்: செந்தூலில் வைத்து 3 பேரைப் பிடித்த புக்கிட் அமான் போலீஸ்!

கோலாலம்பூர் :

ஜோகூர் செகண்ட் லிங்க் (Second Link) அதிவேக நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் தொடர்பாக மேலும் 3 ஆடவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவலும், எஞ்சிய இருவருக்கு 1 நாள் தடுப்புக் காவலும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஒரு கோண்டோமினியத்தில் இன்று அதிகாலை 24 முதல் 41 வயதுக்குட்பட்ட இந்த 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை ஜோகூர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியைச் சிலர் மறித்து, இரு மோட்டார் சைக்கிள்கள் பந்தயத்தில் ஈடுபட வழிவகுத்த 33 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

புக்கிட் அமான் போக்குவரத்துச் அமலாக்கம் மற்றும் விசாரணைத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹஸ்புல்லா அலி கூறுகையில், இந்தச் சட்டவிரோதப் பந்தயத்தில் RM15,000 பந்தயப் பணம் கைமாறியுள்ளதாகப் போலிசார் நம்புவதாகத் தெரிவித்தார். பந்தயத்தின் முடிவில் கொண்டாட்டத்திற்காக வானவெடிகள் வெடிக்கப்பட்டதும், சாலையோரங்களில் ஏராளமான பார்வையாளர்கள் திரண்டிருந்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here