இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன்பின், ஒருநாள் தொடர் தொடங்குகிறது. டி20 தொடர் செப்டம்பர் 15 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதியும் தொடங்குகிறது.இந்த நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களிலிருந்து தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமுடன் இணைந்து கெவின் பீட்டர்சன் செயல்படவுள்ளார். அதன் பின், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கும் கெவின் பீட்டர்சன் ஆலோசகராக செயல்படவுள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை அவர் அணியின் ஆலோசகராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல இங்கிலாந்து அணிக்கு உதவ உள்ளதை நினைத்து மிகுந்த பெருமையடைகிறேன். இது மிகவும் சிறப்பான தருணம் எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக கெவின் பீட்டர்சன் 136 ஒருநாள், 37 டி20, 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.









