கோத்தா திங்கி அருகே இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி உட்பட மூவர் பலி!

கோலாலம்பூர்:

இங்குள்ள கோத்தா திங்கி – குளுவாங் சாலையின் 31.2-வது கிலோமீட்டரில் நேற்று மாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் கணவன், மனைவி உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மணி 6.20 சுமாரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ‘ஹோண்டா பி.ஆர்.வி’ காரில் பயணித்த முகமட் நூர் செலாமாட் (58), மற்றும் ‘பெருடுவா அக்சியா’ (Perodua Axia) காரில் பயணித்த தம்பதியரான முகமட் ஹெர்வான் அலியாஸ் (38), நூர் எசாசாயா முகமட் அலி (34) ஆகிய மூவரே இந்த விபத்தில் பலியானவர்களாவர்.

கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டண்ட் யூசோப் ஒத்மான் கூறுகையில், கோத்தா திங்கியிலிருந்து குளுவாங் நோக்கிச் சென்ற ஹோண்டா பி.ஆர்.வி கார் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த பெருடுவா அக்சியா காரின் மீது பலமாக மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோதலில், ஹோண்டா பி.ஆர்.வி காரின் பின் இருக்கைப் பயணியும், பெருடுவா அக்சியா காரின் முன் இருக்கைப் பயணியும் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். பெருடுவா அக்சியா காரை ஓட்டிச் சென்ற நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், ஹோண்டா பி.ஆர்.வி காரின் ஓட்டுநரும் முன் இருக்கைப் பயணியும் காயங்களுடன் கோட்டா திங்கி மருத்துவமனையில் (HKT) சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here