மலாக்கா தேர்தல் களம் சூடுபிடிக்கிறது: சமூக ஊடகங்களில் ‘மதம், இனவாதம், அரச குடும்பம்’ பற்றி பேச வேண்டாம் – துணையமைச்சர் தியோ நி சிங்ங் அறிவுறுத்தல்!

மலாக்கா:

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சமூக ஊடக உள்ளடக்கங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மலேசிய தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் ஆணையம் (MCMC) நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இணையப் பயனர்கள் மதம், இனம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான உணர்வுபூர்வமான விவகாரங்களைத் தொட்டுப் பேச வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பாடல் துறை துணையமைச்சர் தியோ நி சிங் இது குறித்துக் கூறுகையில், தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் துறையைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக MCMC தனது கண்காணிப்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், தேவைப்படும் இடங்களில் பிற அமலாக்க முகவர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

யுனிவர்சிட்டி டெக்னிக்கல் மலேசியா மலாக்காவில் (UTeM) பொது உயர் கல்வி நிறுவனங்களுக்கான வைஃபை திட்டத்தின் முன்னேற்றத்தை இன்று நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “MCMC அமைப்பாக நாங்கள் எப்போதும் சமூக ஊடக உள்ளடக்கங்களை தீவிரமாகக் கண்காணிப்போம். இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், 3R விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்பதுதான். நம் அனைவருக்கும் பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு, ஆனால் ஜனநாயக முறைப்படி பிரச்சாரம் செய்யுங்கள். சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய உணர்வுபூர்வமான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்,” எனக் கூறினார்.

மலாக்கா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற போதிலும், மாநிலத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.

மாநில நிர்வாகம் தொடர்பான சில முக்கிய விவகாரங்களைத் தீர்க்க வேண்டியுள்ளதாகவும், திட்டமிட்ட பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்த பின்னரே சட்டமன்றம் கலைக்கப்படும் என்றும் மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூஃப் யூசோப் நேற்று தெரிவித்திருந்தார். தற்போதைய சட்டமன்றக் கால அவகாசம் டிசம்பர் இறுதியுடன் முடிவடைவதால், அதற்குள் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here