பூமியின் மேற்பரப்பில் இருந்து 32 ஆயிரம் அடி வரை ஆழமாக துளையிடும் சீனா… காரணம் என்ன.?

உலகின் வளர்ந்த நாடுகளின் ஒன்றான சீனா, விண்வெளி ஆய்வுக்கு மத்தியில் பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் பணிகளை தொடங்கியுள்ளது. அதாவது பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த பணியை சீனா கடந்த செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளது.

அறிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பில் துளையிடும் பணிகள் 10 க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகளை அல்லது பாறை அடுக்குகளில் ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் பகுதியை அடையும். இது சுமார் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறையைக் கொண்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் சில முன்னணி விஞ்ஞானிகளுக்கு உரையாற்றிய உரையில், பூமியின் அடிப்பகுதியை ஆய்வுசெய்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த ஆய்வுகள், கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை ரஷியாவில் உள்ளது.

இது 1989 இல் 12,262 மீட்டர் (40,230 அடி) ஆழத்தை எட்டியது நிலையில், இந்த பணிகள் 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here