இளையராஜா பாடலால் ‘குட் பேட் அக்லி’ ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன?

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா, பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனும் இந்த விஷயத்தை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது, ”ஏழு கோடி ரூபாய்க்கு ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவன் போட்ட பாட்டிற்கு கைதட்டு வராமல் எங்களது பாட்டிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும். அந்த மியூசிக் டைரக்டருக்கு அவ்வளவு கோடிகள் கொடுத்தும், நாங்கள் கொடுத்த இசையை கொண்டுவர முடியவில்லை. அப்படியானால் அதில் எங்களுக்கும் பங்கு இருக்கும் அல்லவா” என்றெல்லாம் கங்கை அமரன் பேசினார்.

இது தொடர்பாக நடிகரும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி.,யிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”அண்ணனுக்கு சப்போர்ட்டாக தம்பி பேசுகின்றார். என் அண்ணனுக்கும் ஒரு பிரச்சனைனா நானும் அவருக்கு ஆதரவாக பேசுவேன். அதுபோல தான் இளையராஜாவுக்கு ஆதரவாக என் அப்பா பேசினார்” என பதிலளித்தார்.

மேலும், ‘இளையராஜா பாடல்களால் தான் குட் பேட் அக்லி படம் ஹிட்டாச்சா ?’ என ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு, ”அதெல்லாம் இல்ல, உண்மை என்னனு எல்லாருக்குமே தெரியும். குட் பேட் அக்லி படம் அஜித்தால் மட்டுமே தான் வெற்றிபெற்றது” என்றார் பிரேம்ஜி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here