கோலாலம்பூர்:
கல்வி அமைச்சகம் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு “Alam dan Manusia: Pembelajaran Bersepadu (இயற்கை மற்றும் மனிதநேயம்: ஒருங்கிணைந்த கற்றல்) என்ற புதிய பாடத்தைக் கொண்டு வர உள்ளது.
இது ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான கற்றல் முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடம் தற்போதைய அறிவியல், சுகாதாரக் கல்வி, காட்சிக் கலை மற்றும் இசைக் கல்வி ஆகிய நான்கு பாடங்களுக்கு மாற்றாக அமையும். மேலும், இது அறிவியல், சுகாதாரம், இசை, கலை, தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகிய பல துறைகளின் கூறுகளை ஒருங்கிணைக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய பாடம் கூட்டுக் கற்பித்தல் (Co-Teaching) என்ற அணுகுமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், இதில் இரண்டு ஆசிரியர்கள் ஒரே வகுப்பறையில் இணைந்து பாடங்களை கற்பிப்பார்கள். “இந்த அணுகுமுறை கூட்டுப் பாடத் திட்டமிடல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டை உள்ளடக்கியது.
இது மாணவர்களின் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யவும், வகுப்பறை மேலாண்மையை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பலத்தை ஒருங்கிணைக்கவும் உதவும்,” என்று அமைச்சகம் விளக்கியது.
முதலில், இந்தப் புதிய பாடம் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இது தொடக்க நிலைக் கல்வியின் (முதலாம் முதல் மூன்றாம் வகுப்பு வரை) முக்கிய நோக்கமான எழுத்தறிவு, எண் திறன் மற்றும் நற்பண்பு வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உயர் நிலைக் கற்றலுக்குச் செல்லும் முன், அடிப்படைத் திறன்களை உறுதிப்படுத்த குறைந்த எண்ணிக்கையிலான பாடங்கள் மட்டுமே இந்த கட்டத்தில் கற்பிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.





















