கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருளினால் எந்த ஆபத்தும் இல்லை என்று அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 7:10 மணியளவில் தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து, காவல்துறையினருடன் இணைந்து ராணுவத்தின் சிறப்புப் பிரிவினரும் (Special military team) தேவாலயத்திற்கு விரைந்தனர். பாதுகாப்பு கருதி தேவாலயத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அந்தப் பொருள் பாதிப்பற்றது என்றும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சிங்கப்பூர் காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அந்த இடத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே புனித ஜோசப் தேவாலயத்தில் கடந்த ஆண்டு திருப்பலியின் போது (Mass service), 57 வயதுடைய பாதிரியார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய நிகழ்வு அப்பகுதியில் தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தியது.




















