ஷா ஆலம்:
தொடக்கப்பள்ளி மதிப்பீட்டுத் தேர்வு (UPSR) மற்றும் படிவம் 3 மதிப்பீடு (PT3) ஆகிய தேர்வுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பான முன்மொழிவை ஆய்வு செய்யக் கல்வி அமைச்சுக்கு அவகாசம் தேவை என்று அமைச்சர் ஃபட்லினா சிடெக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தேர்வுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் (Holistic development) ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அவற்றின் செயல்திறனை மதிப்பிடக் கவனமான ஆய்வு அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இது குறித்த ஆய்வை மேற்கொள்ளத் தேசியக் கல்வி ஆலோசனைக் குழுவிடம் (National Education Advisory Council) பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஆரம்பக்கட்ட கருத்துகளுடன், இந்த விரிவான ஆய்வின் முடிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
2026/2027 கல்வியாண்டின் முதல் நாளையொட்டி எல்மினாவில் உள்ள எஸ்.ஜே.கே.சி (SJKC) லாடாங் ரீஜென்ட் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது: பெற்றோர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளுக்கு இந்த ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வு நடப்பு ஆண்டிற்குள் (2026) முடிக்கப்பட்டு, அதன் முடிவுகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் எதிர்பார்ப்பதாக சொன்னார்.


















