நமக்கு வரக்கூடிய தீர்க்க முடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாட்டை செய்யலாம்.
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் ‘குலதெய்வங்கள்’ என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
நமக்கு வரக்கூடிய தீர்க்க முடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாட்டை செய்யலாம். குலதெய்வத்திற்கு உகந்த நாளை இந்த பூஜைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பூஜையை காலை 6 மணி அளவில் செய்வது சிறப்பாக இருக்கும். அதிகாலை வேளையிலேயே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை, குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதாக நினைத்து மனதார, மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என்று மண் அகல் விளக்கில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால் குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நைவேத்தியமாக வைக்கலாம்.
ஒரு மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை வைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாக இந்த காணிக்கையை வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ‘குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை அமையவில்லை, எப்போது குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அந்த சமயம் இந்த காணிக்கையை உண்டியலில் சேர்த்து விடுகிறோம்’ என்று சொல்லி அந்த காணிக்கையை முடிந்து பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.
இப்படி வருடம்தோறும் உங்களுடைய குலதெய்வத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்களோ, அதை மஞ்சள் துணியில் வைத்து, குலதெய்வத்திற்கு நீங்கள் செய்யும் வேண்டுதல்களை செய்துவிட்டதாக நினைத்து, மஞ்சள் துணியை முடிந்து பூஜை அறையில் வைத்தால் போதும் அந்த வேண்டுதல் குலதெய்வத்தை சேர்ந்துவிடும். அடுத்தமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது, இந்த மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்திருக்கும் காணிக்கையை குலதெய்வ கோயிலில் சேர்த்து விட வேண்டும்.





















