மத்திய கிழக்கு பதற்றம்: ஆசியான் நாடுகள் ஒன்றிணைய பிரதமர் அன்வார் அழைப்பு!

செபு (பிலிப்பைன்ஸ்):

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், ஆசியான் பிராந்தியத்தின் உணவு விநியோகத்தை உறுதிப்படுத்த வலுவான ‘பிராந்திய தயார்நிலை நடைமுறை’ (Regional Preparedness Mechanism) ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் செபு (Cebu) நகரில் இன்று நடைபெற்ற 48-வது ஆசியான் உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய கிழக்கு பதற்றத்தால் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் விளைவாக உரங்களின் விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுப்பதாக எச்சரித்தார். வெறும் அரிசி கையிருப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உரப் பாதுகாப்பிலும் (Fertilizer Security) ஆசியான் நாடுகள் தங்களுக்குள் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிராந்தியத்தின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ‘பெட்ரோலியப் பாதுகாப்பு உடன்படிக்கையை’ (Petroleum Security Agreement) விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நெருக்கடி காலங்களில் ஆசியான் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுப்பு நாடுகள் உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வெறும் துறை சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. மாறாக, இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான போர்முறை முன்னுரிமையாக (Strategic Priority) இதனைக் கருத வேண்டும்,” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது உரையில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

பிரதமரின் இந்தப் பரிந்துரைகள் ஆசியான் தலைவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பிராந்தியத்தின் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here