காஜாங்:
உலு லங்காட், டுசுன் துவா (Dusun Tua) பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற அதிரடி வேட்டையின் போது, போலீசாரை காரை ஏற்றி கொல்ல முயன்ற ஒரு நபர் மற்றும் இரண்டு பெண்களை காஜான் மாவட்ட போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தம்பின் (Tampin) மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரவு 9.30 மணியளவில் டுசுன் துவா, ஜாலான் பத்து 15 1/4 பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை போலீசார் நிறுத்த முயன்றனர்.
ஆனால், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரின் உத்தரவை மதிக்காமல், அவர்கள் மீது காரை மோதிவிட்டு தப்பியோட முயன்றனர். தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த போலீசார், தற்காப்புக்காக அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காரை மடக்கிய போலீசார் அதற்குள் இருந்த ஒரு ஆடவரையும் இரண்டு பெண்களையும் உடனடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பல்வேறு குற்றப்பின்னணிகளைக் கொண்டவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது:
முதல் குற்றவாளிக்கு 6 முந்தைய குற்ற வழக்குகள் மற்றும் 3 போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன, இரண்டாவது குற்றவாளிக்கு 4 முந்தைய குற்ற வழக்குகள் மற்றும் 11 போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன, அதேநேரம் மூன்றாவது குற்றவாளிக்கு 6 முந்தைய குற்ற வழக்குகள் மற்றும் 2 போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன என்று அவர் சொன்னார்.
மேலும், அவர்கள் பயன்படுத்திய வாகனம் போலிப் பதிவு எண்ணைக் கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து பல கைப்பேசிகளும், காரின் ரிமோட் கன்ட்ரோல்களும் (Remote Controls) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் டாம்பின் மாவட்ட போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி (பிரிவு 307) மற்றும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (பிரிவு 186) ஆகிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



















