ஈப்போ:
பேராக், தப்பா பகுதிக்கு அருகே உள்ள ‘குனுங் பத்து புத்தே’ மலையில் கடந்த ஒரு வார காலமாகத் தேடப்பட்டு வரும் 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சலுடின், அந்த மலையின் உச்சியைப் பத்திரமாகச் சென்றடைந்துள்ளார் என்பதற்கான மிக முக்கியத் தடையம் ஒன்று கிடைத்துள்ளது.
மழைக்காட்டுப் பாதையின் தரைப்பகுதியில் அவர் கைகளால் எழுதிவிட்டுச் சென்றுள்ள ஒரு குறிப்பு, அவர் மலையுச்சியை அடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
‘டிரான்ஸ் ஸ்பென்சர் சேப்மேன்’ (Trans Spencer Chapman) மலையேற்றக் குழுவின் பின்வரிசைப் பாதுகாவலராகவும் (Sweeper) வழிகாட்டியாகவும் பணியாற்றிய ஹஃபீஸ் (Hafiz) என்பவர் இத்தடையம் குறித்துக் கூறுகையில்: “ஜாஸ்லிண்டாவின் மொபைல் போன் பேட்டரி மலையேற்றத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தீர்ந்துவிட்டது. இதனால், அவர் மலையுச்சியை அடைந்ததை எனக்குத் தெரியப்படுத்த, அங்கிருந்த தரையில் ‘ஹஃபீஸ், புகைப்படம் எடுத்துக்கொள், அக்கா உச்சியை அடைந்துவிட்டேன்’ (HAFIZ AMBIK GAMBAR AKAK DH SAMPAI) என்று எழுதி வைத்துள்ளார். அவர் மே 24 காலை 10.00 மணியளவில் உச்சியை அடைந்திருக்கலாம். நான் காலை 11.00 மணிக்கு அங்கு சென்றபோதுதான் இந்த எழுத்துக்களைக் கண்டேன்.”
உடனடியாக ஹஃபீஸ் அந்தத் தரைக்குறிப்பைத் தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். எனினும், அந்த உச்சிப் பகுதியில் இருந்து அவர் எந்தப் பாதையில் கீழே இறங்கினார் அல்லது எங்குச் சென்றார் என்பதற்கான இதர தடயங்கள் எதுவும் அங்கு இல்லை.
ஜாஸ்லிண்டாவைக் கண்டுபிடிப்பதற்காகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தற்போது அதிநவீன ஆளில்லா விண்கலங்களைச் (Drones / UAV) களமிறக்கியுள்ளது.
இந்நிலையில் “தற்போது எங்களின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி (SAR Operation) அனைத்தும் ‘சுங்கை ஆயர் புசோக்’ (Sungai Ayer Busok) ஆற்றுப் பகுதியை நோக்கியே திருப்பப்பட்டுள்ளது. மலைப்பாதையில் வழிதவறிய ஜாஸ்லிண்டா, குடிநீருக்காக இந்த ஆற்றுப் பகுதியை நோக்கித்தான் இறங்கியிருக்க வேண்டும் என பலமாக நம்பப்படுகிறது” என்று, பேராக் தீயணைப்புத் துறை இயக்குநர் சாயானி சைடோன் கூறினார்.
கடந்த மே 23-ஆம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், ஜாஸ்லிண்டா உட்பட 14 மலையேற்றப் பயணிகளும் 2 வனத்துறை வழிகாட்டிகளும் Pos Gedung-Gunung Bah Gading-Gunung Batu Putih-Kuala Woh என்ற கடினமான மலைப்பாதையில் தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.
மே 24 காலை 7:30 மணியளவில், உடன் வந்த முகமட் ஹனாஃபி (வயது 41) என்ற சக பயணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஜாஸ்லிண்டா அவருடன் வழியில் சிறிது நேரம் தங்கியுள்ளார். பின்னர், ஹனாஃபி பாதுகாப்பாகத் திரும்பிய நிலையில், ஜாஸ்லிண்டா மட்டும் தனியாக மலையுச்சியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார். அதுவே அவர் கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்ட தருணமாகும்.
கடந்த 6 நாட்களாக அடர்ந்த காடுகளுக்குள் சிக்கியிருக்கும் 49 வயது வீராங்கனையை உயிருடன் மீட்க மீட்புப் படையினரும், வனத்துறை வழிகாட்டிகளும் தங்களின் உயிரைப் பணயம் வைத்துத் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.




















