கோலாலம்பூர்:
மலேசியாவின் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் ஜூன் 12-ஆம் தேதி தேர்தல் ஆணையம் (EC) ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 15-ஆவது சட்டமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கூட்டம் கூட்டப்படுவதாகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சிறப்பு கூட்டம் 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துடன் இணைந்தே நடைபெறவுள்ளது.தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான மிக முக்கியமான தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதுகுறித்து டத்தோ கைருல் ஷஹ்ரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:”இந்தச் சிறப்பு கூட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆணை (Writ of election) பிறப்பிக்கப்படும் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள், வாக்குப்பதிவு நாள், பயன்படுத்தப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடத்துவதற்கான பிற ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.” இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த உடனே, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ செய்தியாளர் சந்திப்பை நடத்தி தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்றும் கைருல் ஷஹ்ரில் தெரிவித்துள்ளார்.
36 தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம், புதிய தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்படி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















